Friday, August 19, 2011

ஊழலுக்கு நான் எதிரி

இன்று ஊழலுக்கு எதிர்ப்பாக நடந்து கொண்டிருக்கும் மிக பெரிய போராட்டம் இந்திய மக்களை நிச்சயம் விழிப்படைய வைத்திருக்கிறது. ஊழலுக்கு எதிர்ப்பான இந்த விழிப்புணர்வு உலகளவில் ஒரு மாற்றத்தை தரும் என்று நான் நம்புகிறேன்..

ஒரு சாதாரணமான சாமானிய குடி மகனாக நான் என் உணர்வுகளை தெரிவிக்க இந்த போராட்டத்தில் என்னை இணைத்துக்கொண்டு ஆகஸ்ட் 21 ம் தேதி சிவானந்த காலனியில் நடக்கும் பேரணியில் பங்கேற்கிறேன்..

 நான் வெறும் சிறு துளி தான்.. ஊழல் என்ற வியாதியை ஒட்டு மொத்தமாக அழித்துவிட துடிக்கும் என்னை போல் எத்தனையோ சிறு துளிகள் இன்று ஒன்று சேர்ந்து பெரும் கடலாக மாறியுள்ளது என் தாய் திரு நாட்டிற்க்கு நிச்சயம் நன்மையாய் முடியும்.

இதுவெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும், எனக்கு தோன்றிய சில கேள்விகளுக்கு யாரேனும் பதில் தெரிந்தால் சொல்லுங்கள்.....

1 . காலை 10 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை இலங்கை தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருந்த ஒரு தமிழக கட்சியின் தலைவர் இன்று இந்தியர்களுக்காக நடக்கும் ஒரு உரிமை போராட்டதிற்கு மவுனம் சாதிப்பது ஏன்?

2 . மேற் சொன்ன அறபோராட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்த ஒரு தொலைக்காட்சி கடந்த சில தினங்களாக நடக்கும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தையும் அதன் பின்னணியில் நடக்கும் அவலங்களையும் பெயரளவில் செய்தி வெளியிடுவதோடு நிறுத்திக்கொண்டதேன்???

3 . இலங்கை தமிழர்களுக்காக பல விதத்தில் போராட்டம்  மற்றும் கண்டன நடவடிக்கைகள் செய்த தமிழ் திரையுலகம் இன்று சென்றதெங்கே???

4 . விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதை மேடை போட்டு கண்டித்த கட்சிகள் இன்று எங்கே???

5 . இலங்கை அரசின் அடக்குமுறைகளை கண்டித்து கதறி துடித்தவர்கள் இன்று இந்திய அரசின் செயல்களை கண்டு மௌனம் சாதிப்பது ஏன்???

இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளை நீங்கள் கண்டித்து வெகுண்டெழுந்த போது அதை கண்டு பெருமை கொண்ட இந்த தமிழன் இன்று ஒரு இந்தியனாய் நீங்கள் செத்துவிட்டதை எண்ணி மனம் குமுறுகிறேன்.

நதிநீர் இணைபிற்காக உண்ணாவிரதம் இருந்த என் அபிமானத்திற்கு உரியவர்களே....  அதைவிடவும் முக்கியமான ஊழல் ஒழிப்பு போராட்டத்தில் உங்களை காண முடியவில்லையே??? நீங்கள் திடீர் ஊமைகளாகிபோன ரகசியம் என்ன?????  

என் மானசீக தலைவன், 74 வயது இளைஞன், நாட்டின் இரண்டாவது சுதந்திர போராட்டத்தை நடத்தும் இந்த நாட்டின் இரண்டாவது தேச தந்தை, வாழும் மகாத்மா... ஊழலற்ற இந்தியாவின் முதல் அடிக்கல்லை நட்டு வைக்க போராடும் அண்ணா ஹசாரே வின் போராட்டம் வெற்றி பெற வணங்கி என்னை ஒரு சிறு துளியாய் இணைத்துக்கொள்கிறேன்.

Wednesday, August 3, 2011

கணேசன்... பார்த்த சலித்த பழைய மனிதன்

போடிநாயக்கனூர் கணேசன் என்ற திரை காவியத்தை (?) சென்ற வார இறுதியில் பார்த்துவிட்டு திரை அரங்கத்தை விட்டு வரும் பொழுது என் மனதில் ஒரே கேள்வி தான் நின்றது...
இந்த திரைபடத்தில் வித்தியாசமான முயற்சி ஏதேனும் இருந்ததா?

1. நாயகன் சட்ட விரோதமான செயல்களில் அதற்காகவே பிறந்தது போல் மிக தேர்ச்சியுடன் ஈடுபடுகிறான்...
2 . அவன் மாறிவிட மாட்டானா?? என்று ஒரு தாய்குலம் திருப்தி வெங்கடாசலபதியிடம் வேண்டுகிறாள் (ஒரு ஆறுதல்... இது நாயகனின் தாய் இல்லை )
3 . நாயகனை வில்லன் தன் சட்ட விரோத செயல்களுக்கு பயன்படுத்தி கொள்கிறான் (எதிர்பார்த்தது போலவே இதற்கு ஒரு பின் கதை உள்ளது..)
4 . தனக்கு விருப்பமே இல்லாமல் செய்துகொடுத்த சத்தியத்திற்காக நாயகன் வில்லனுடன் இருக்கிறான் (விரும்பிவிட்டால் வில்லனாகிவிடுவானே...)
5 . வழக்கம் போல் நாயகியின் உணர்ச்சி மிகுந்த வசனத்தில் பொங்கியெழும் நாயகன் வில்லனை அழித்து நல்லவனாகிறான்... (வித்தியாசத்திற்கு பாவம் ஒரு மன நோயாளியை வேறு கொன்றிருக்கிறார்கள்)
6 . எதற்காக வில்லனை பன்றி மேய்க்க விட்டார்கள் என்று தான் புரியவில்லை!!!

அட.. என்ன ஒரு கதை.. இதை வடிக்க இயக்குனர் எத்தனை மெனு கெட்டிருக்க வேண்டும்??? அதனால் தானோ என்னவோ தானே நாயகனாக முடிவெடுத்து விட்டார்...


அரங்கத்தை விட்டு வரும் பொழுது இரு நண்பர்கள் பேசிகொண்டது என் மனதில் அலை மோதியது...

நண்பன் 1 : டேய்.. நான் அப்போவே சொன்னேன் வேண்டாம்னு.. கேட்டியா???
நண்பன் 2 : வேற படத்துக்கு டிக்கெட் கெடைகளையே டா..
நண்பன் 1 : இந்த படத்த பாத்ததுக்கு 3 மணி நேரம் வீட்ல தூங்கிருக்கலாம்..
நண்பன் 2 : செரி வா.. ஒரு தம் போடலாம்.. அப்போ தான் தல வலி தீரும்....